"இன்றைய சமுதாயத்தில் ஒரு சிறந்த ஆசிரியரின் பண்பு நலன்கள்"
ஒவ்வொரு நாட்டிலும் எதிர்கால சமுதாயத்தை உருவாக்கக் கூடிய சீரிய பணி ஆசிரியர்களின் கையில் ஒப்படைக்கப்படுகின்றது. அந்த சமுதாயத்தின் முன்னேற்றம், வீழ்ச்சி இரண்டுமே ஆசிரியர்களின் கையில்தான் இருக்கிறது. மிகப்பெரிய சமுதாயப்பணி தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதை உணர்ந்து ஆசிரியர்கள் தங்கள் பொறுப்புகளிலிருந்தும், கடமைகளிலிருந்தும் தவறாமல் புதிய பாதையில் வழிநடத்திச் செல்ல வேண்டும். இதனை நம் ஆசிரியர்கள் செவ்வனே செய்து வருகின்றனர்.
"மாதா,பிதா,குரு,தெய்வம்" என்று நமது முன்னோர் வரிசைப்படுத்தி உள்ளனர். ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் தந்தைக்கு அடுத்தபடியாக அவர்களின் எதிர்காலம் குரு என்ற ஆசிரியரின் கையிலிருப்பதை உணர்ந்து சொல்லி இருக்கின்றார்கள். அதனால் ஆசிரியர்கள் தம் நிலை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருதல் கண்கூடு.
நிலத்தையும், மலையையும், துலாக் கோலையும், மலரையும் ஒத்த குணங்களை உடையவராக வேண்டும்.மற்ற தொழில்களில் குற்றம் இருக்கலாம்.
ஆனால் ஆசிரியப்பணி அப்படிப்பட்ட தன்று. அது புனிதமானது. ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் பணி இதில் கிடைக்கும் ஆன்ம நிறைவு வேறு எதிலும் கிடைக்காது.
ஆசிரியர்களை நாம் கேணி என்றும், ஏணி என்னும் தோணி என்றும் உருவகமாகச் சொல்ல முடியும். நீர் நிறைந்த கேணி தன்னிடத்தில் உள்ள நீரை உயிர்களுக்கு வழங்கி வாழ வைப்பது போல, ஆசிரியர்களும் தங்களிடத்துள்ள அறிவுக் களஞ்சியத்திலிருந்து பலவற்றை அள்ளியெடுத்து மாணவர்களுக்கு அளிக்கின்றனர்.
ஏணியானது பலர் மேலே ஏறிச் செல்லக் காரணமாக இருந்து, தான் கீழேயே இருக்கிறது. அதுபோல் ஆசிரியர்களும் பல கணக்கற்ற மாணவர்களை தங்களுடைய கற்பித்தலால் முன்னேற்றப் பாதையில் மேனிலைக்குச் செலுத்தி, தாங்கள் இருந்த இடத்திலேயே இருக்கின்றனர்.
ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு மக்களை ஏற்றிச் செல்ல உதவுவது தோணி. மாணவர்களை அறியாமையென்றும் ஒரு கரையிலிருந்து அறிவொளி என்ற மறுகரைக்கு இட்டுச் செல்ல துணை புரியும் ஆசிரியர்களைத் தோணி என்று கூறலாம்.
ஆசிரியர் ஒரு தொழில் வல்லுநர் என்ற அடிப்படையில் அவருக்குரிய பண்புகளைச் சித்தரிக்கிறது. ஒவ்வொரு பண்பும் ஒன்றுடன் ஒன்று சார்ந்ததாக உள்ளது. அதாவது ஒரு பண்பின் சிறப்பு, மற்ற பண்பின் வார்ச்சிக்கு உதவுவதாக உள்ளது. இவ்வாறான பண்புகளைப் பற்றிக் கீழே காண்போம்.
1). ஆசிரியர் - பொறுப்பானவர்
*********************************************
பெற்றோருக்கும் அடுத்தபடியாக ஒரு குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர் ஆசிரியர் ஆவார். வளமான எதிர்காலத்திற்கு ஒரு நல்ல பள்ளி சூழ்நிலை அத்தியாவசியமாகிறது. அச்சூழ்நிலையை உருவாக்கும் பொறும் ஆசிரியருடையது. மாணாக்கர்களை வழிநடத்தும் ஆசிரியர் ஆசிரியராக தன்னுடைய பள்ளியில் ஆற்ற வேண்டிய கடமைகளை நன்கு உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும்.
எடுத்துக் காட்டாக பள்ளி வருகையில் நேரந்தவறாமை, வகுப்புக்குச் செல்வதில் காலம் தவறாமை, கொடுக்கப்பட்ட பாடப்பொருளை தகுந்த முறையுடன் கற்பித்தல், அட்டவணைப் படி பாடத்திட்டங்களை முடித்தல், மாணாக்கர்களின் கற்றல் நிகழ்வுகளை தொடர்ந்து கவனித்து வருதல், மதிப்பீடு செய்தலில் பிறழாமை மற்றும் தொடர்பணியில் சீரான போக்கு போன்றவை ஆசிரியர் தன் பணிக்கு ஆற்றும் கடமையாகும்.
ஒரு பள்ளியின் தலைமைப் பொறுப்பு தலைமை ஆசிரியரிடம் உள்ளது. அவர் தான் ஆசிரியருக்கு மேல் அலுவலர் ஒரு பள்ளி நலனுக்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பு தலைமையாசிரியருக்குத் தேவை. பள்ளியின் ஒழுங்கு, கட்டுப்பாடு மற்றும் அதன் முழு வளர்ச்சியில் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு தலைமையாசிரியருக்குத் தேவை. பள்ளியின் வளர்ச்சியை மனதில் கொண்டு, தலைமையாசிரியர் கொடுத்த பணிகளை ஆசிரியர் முழுமனதுடன் செய்தல் வேண்டும். அங்ஙனம் பணி புரிதல் ஆசிரியருக்கு மதிப்பும் மகிழ்ச்சியும் தருவதாகும்.
மாணாக்கர்களின் எதிர்காலம் ஆசிரியரின் பொறுப்பாகிறது என்பதைச் சற்று முன் கண்டோம். ஒரு வகுப்பில் பல்வேறு குடும்பச் சூழ்நிலைகளில் இருந்து மாணாக்கர்கள் ஒருங்கே அமர்ந்திருப்பர் அவர்களது வளர்ப்பு சூழ்நிலைகள் வெவ்வேறானவை இதனை வகுப்புக்குள் செல்லும் ஒவ்வொரு ஆசிரியரும் மனதில் கொள்ள வேண்டும்.
இந்த வேறுபாடுகள் மாணாக்கர்களை அடையாளம் காட்டும் ஆசிரியர் கற்பிக்கும் பாடப்பொருள் ஒன்றாக இருக்கும் அவை மாணாக்கர்களை ஒருமித்து சென்றடையாது. ஒரு சில மாணாக்கர்களே ஆசிரியரின் எதிர்பார்ப்பின்படி பதில் அளிப்பார்கள்.
ஆசிரியர் சரியான பதில் தராதவர்களை ஒதுக்கிவிடாமல், அவரவர் நிறைகுறைகளை அறிந்து, அனைவரும் கற்றலில் முழுமை பெற துணை செய்ய வேண்டும். மேலும் மாணாக்கர்களின் புரிந்து கொள்ளுதலின் நிலையை நிர்ணயம் செய்து ஆசிரியர் கற்பித்தல் முறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு தன் பணியிலும், தலைமையாசிரியரிடத்திலும், மாணவர்களிடத்திலும் பொறுப்பாய் ஆசிரியப் பணி செய்ய வேண்டியது ஆசிரியரின் கடமையாகும். அத்தகைய ஆசிரியரிடம் பயிலும் மாணாக்கர்களது வாழ்வு வளமானதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
2). ஆசிரியர்-விருப்பு வெறுப்பற்ற நடுநிலை மனத்தை உடையவர்
*******************************************
ஆசிரியர் பார்வையில் குழந்தைகள் அனைவரும் சமம். உலகில் மனிதர் ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து வேறுபடுகின்றனர். அதேபோன்று மாணாக்கர்களிடையே வேறுபாடுகள் தென்படும். வேறுபாடு மனித இயல்பு என்பதனையும், மாணாக்கர்கள் அனைவரும் ஒரே வகுப்பில் ஒரே ஆசிரியரிடம் நம்பிக்கையுடன் வந்தவர்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் முன்னாள் இந்திய ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான பாரத ரத்னா திரு அப்துல்கலாம் அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு சிறு நிகழ்ச்சியை இங்கு காண்போம்.
பேராசிரியர் கே.ஏ.வி. மண்டல் என்பவர் எனக்குக் கற்பித்தார் உற்சாகம் பொங்கும், தோழமையான, ஆர்வத்துடிப்பான ஆசிரியர். அவர் ஒவ்வொரு வருடமும், போதனைத் திட்டத்தில் புதுப்புது அணுகுமுறைகளை அறிமுகப்படுத்துவார். கட்டமைப்பு பொறியியல் (Structural Engineering) ரகசியங்களை எங்களுக்கு வெளிப்படுத்திக் காட்டியவர் அவர் தான். அவரிடம் கற்றுக்கொண்ட மாணவர்கள் இன்றைக்குகூட நேர்மையிலும் அறிவாற்றலிலும் அவர் உயர்ந்தவர் என்பதை ஒப்புக் கொள்வார்கள் அடாவடித்தனத்தின் சாயலைக் கூட அவரிடம் காண முடியாது. வகுப்பறையில் அவர் பாடம் நடத்தும்போது சில கட்டங்களில் அவரோடு முரண்பட்டுப் பேச மாணவர்கள் தயங்கவே மாட்டார்கள்.
நடுநிலை மனத்தை உடைய ஆசிரியர், மாணாக்கர்கள் மனதில் எவ்வாறு உயர்ந்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இது தவிர நன்றாகப் படிப்பவன், சொன்னதைச் செய்பவன், புத்திமான் என்று வேறுபாடு பார்க்காமல், அனைவரும் என்னுடைய மாணவர்கள் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். கற்றல் நிகழ்வில் மாணாக்கர்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் களைய முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் அனைவரும் அடைவுத் திறனைப் பெற கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். தேர்ச்சி அடைவில் பின்தங்கிய மாணாக்கர்களை ஊக்குவித்து அவர்களும் தேர்ச்சியடைய வழி செய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பண்புகளுடன், பெரியோர்களின் அனுபவங்கள் மூலம் அறிந்து, பண்புகளையும் ஒருங்கே பெற்று, விருப்பு வெறுப்புற்ற நடுநிலை மனத்தை உடையவராக ஆசிரியர் இருத்தல் வேண்டும். அங்ஙனம் வழிநடத்தப்படும் குழந்தைகளும் விருப்பு வெறுப்பில்லாமல் மனநலம் நிறைந்த குழந்தைகளாக இருப்பார்கள். அன்புடன் மற்றவர்களை மதிக்கவும் பழகுவார்கள். அமைதியான மனதுடன் வளரும் குழந்தைகள் நிறைய சிந்தனை வளம் பெற்றவர்களாகவும், சாதனையாளர்களாகவும் ஆவார்கள் என்பதில் ஐயமில்லை.
3). ஆசிரியர் - தன்னம்பிக்கை உடையவர்
***********************************************
"தன்னம்பிக்கை ஒரு மனிதனுக்கு முதுகெலும்பு போன்றது சோர்வடைந்த உள்ளத்துக்கு மருந்து போன்றது” -சூழ்நிலை காரணமாக மாணாக்கர்கள் குழப்பமடைய நேரிடலாம். குழப்பதிலிருந்து தெளிவு பெற உதவுபவர் இல்லாமல் இருக்கலாம். ஆசிரியர் மாணாக்கர்களை அணுகும் முறை ஒளிவு மறைவில்லாததாக இருக்க வேண்டும். இதமான செயல்பாட்டால் வகுப்பில் மாணாக்கர்களுக்கு ஈடுபாட்டினை வளர்க்க வேண்டும். ஒவ்வொரு மாணாக்கரையும் ஒரு குறிக்கோள் அமைத்து வாழப் பழக்க வேண்டும்.
வகுப்பறைகளில் அடிக்கடி குறிக்கோளை நினைவுபடுத்தி, அதனை அடையும் வேட்கையை (Desire to achieve goal) வளர்க்க வேண்டும். அந்த வேட்கையை அடைந்து விடுவோம் என்பதில் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் வளர்க்க வேண்டும். அவ்வாறு வேட்கை, நம்பிக்கை, எதிர்பார்ப்பு என்ற மூன்று வலுவான சக்திகளை மாணாக்கர்களுக்குப் புரிய வைக்கும் ஆசிரியர் தன்னம்பிக்கை உடையவர் அவரது தன்னம்பிக்கை மாணாக்கர்களையும் தன்னம்பிக்கையுடன் பயிலச் செய்யும்.
4). ஆசிரியர் தொடர்ந்து கற்கும் ஆர்வமுடையவர்
*********************************************
"கற்றலுக்கான கற்றல்" (Learning to team) என்பதை செயல்வடிவ ஈடேற்றம் பெற வேண்டும் என்று யுனெஸ்கோ வலியுறுத்துகிறது. அதாவது கல்வியும் கற்றலும் வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டுமென அறிவுறுத்துகின்றது.
ஆசிரியர்கள் படித்த பட்டதாரிகள் என்றாலும், மாறிவரும் சூழ்நிலையில் பாடத்திட்டமும், கற்பிக்கும் முறையும் மாற்றங்கள் பெறுவதால் புதியனவற்றை கற்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். கணிப்பொறியுகத்தில் கணிப்பொறிச் செயல்பாடு அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. ஆகவே கணிப்பொறியில் தேர்ச்சி பெற முயற்சிக்க வேண்டும். அதற்கான மேற்படிப்பு அவசியமெனில் தொலைதூரக் கல்வி முறையைப் பயன்படுத்தி தன் கல்வித் தரத்தை உயர்த்திக் கொள்ளல் வேண்டும்.
எத்தகைய ஒரு கற்றல் சந்தர்ப்பத்தை எதிர்கொள்ளும் பொழுதும், அறிவு, திறன் மனப்பாங்கு முதலியவற்றில் ஒருங்கிணைந்த முழுமைத்திறன் அடைய வேண்டும். கற்கும் ஆற்றல் வயது வளர்ச்சியுடன் வளர்ந்து கொண்டே வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமது பலத்தையும் பலவீனத்தையும் ஆசிரியர் இனம் கண்டு தம்மை செம்மைப்படுத்த முயற்சித்தல் வேண்டும்.
தொடர்ந்து கற்றல் ஒருவரிடையே மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. அந்த மாற்றம் நடத்தை மாற்றமாகவோ சிந்தனை மாற்றமாகவோ இருக்கக் கூடும். கற்றல் வழியாக தற்புலக்காட்சி வளம் பெறும். அது புத்தாக்கப் (Reorientation) பயிற்சியை ஏற்படுத்துகின்றது. இத்தகைய கற்றல் அனுபவத்தில் உள்ள ஆசிரியரால் மாணாக்கர்களின் கற்றலுக்கான தேவையை உணர்ந்து கொள்ள முடியும்; முந்தைய அனுபவங்களின் தொகுப்புடன் கற்றலை இணைக்க முடியும்; வாழ்க்கை செயற்பணிகளுடன் கற்றலை ஒருங்கிணைக்க முடியும், கற்பதற்குப் பொருத்தமான அகப்புறச் சூழ்நிலையை ஏற்படுத்த முடியும்; கற்பவர்களின் கற்கும் தன்மையறிந்து (Learning Style) பாடப்பொருளை உணரச் செய்ய முடியும். அத்தகைய ஆசிரியரின் மாணாக்கர்கள் நல்ல கற்றல் அனுபவம் பெறுவார்கள் என்பது உண்மையாகிறது.
இந்த அடிப்படையில்தான் கல்வி நிறுவனங்கள் பல கருத்தரங்கு மாநாடுகள் போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கருத்தாளர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு கருத்துச்செறிவு ஏற்பட உதவுகின்றன. இதனை ஆசிரியர்கள் நன்கு பயன்படுத்தித் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
- நன்றி ஆசிரியர்களே
""""""""""'"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
என்றும் அன்புடன்
கார்த்திக்
முதுகலை கணிதஆசிரியர்
திருப்பூர்
கல்வி ஆசிரியர்கள்
http://kalviasiriyarkal.blogspot.com
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
0 Comments